காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
மு.வரதராசனார் உரை:
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமமும் நாணும் – காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து – தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் – உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. ‘தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்’ என்பதாம்.)
உரை:
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.
மணக்குடவர் உரை:
வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்) இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமமாகிய நோயும் நாணமும் தம்மைத் தாங்க முடியாத உடம்பின் கண்ணே உயிரைக் காவடித் தண்டாக வைத்து அதன் இரு முனைகளிலும் தொங்குகின்றன.
Transliteration:
kaamamum naanum uyirkaavaath thoongum-en
noanaa udampin akaththu
Translation:
My soul, like porter’s pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame.
Explanation:
(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
மறுமொழி இடவும்