நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
மு.வரதராசனார் உரை:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
பரிமேலழகர் உரை:
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் – உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் – வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் ‘வாராமுன்’ என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் ‘மேற்சென்று’ என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.).
உரை:
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
மணக்குடவர் உரை:
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பேச முடியாதபடி நாவினை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னமேயே அறச் செயலானது விரைவாகச் செய்யப்படுதல் வேண்டும்.
Transliteration:
naachchetru vikkuLmael vaaraamun nalvinai
maeRsendru seyyap padum
Translation:
Before the tongue lie powerless, ‘mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Explanation:
Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent.
மறுமொழி இடவும்