விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
மு.வரதராசனார் உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
பரிமேலழகர் உரை:
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் – தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் – தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், ‘வடு’ என்றார். ‘வாய்சோரா’ எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.
Transliteration:
vitumaatram vaendharkku uraippaan vadumaatram
vaaisaeraa van-ka Navan
Translation:
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.
Explanation:
He alone is fit to communicate (his sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
மறுமொழி இடவும்