குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
மு.வரதராசனார் உரை:
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் – துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க – தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.).
உரை:
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
மணக்குடவர் உரை:
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தமக்குப் பின்பு துன்பங்களை வந்து வருத்த வேண்டாமென்று நினைப்பவர்கள், பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பார்களாக.
Translation:
What ranks as evil spare to do, if thou would’st shun
Affliction sore through ill to thee by others done.
Explanation:
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
மறுமொழி இடவும்