குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
பரிமேலழகர் உரை:
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு – ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு – அறிவான் வேறு. (‘கொள்ளாதார்’ என்பதூஉம், ‘அறிவான்’ என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் ‘வேறு’ என்றார்.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
மணக்குடவர் உரை:
நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
Transliteration:
kuRiththadhu kooRaamaik koLvaaroa taenai
uRuppoa ranaiyaraal vaeRu
Translation:
Who reads what’s shown by signs, though words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he.
Explanation:
Those who understand one’s thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
மறுமொழி இடவும்