எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
மு.வரதராசனார் உரை:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
எய்தற்கு அரியது இயைந்தக்கால் – பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் – அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
(ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் ‘எய்தற்கு அரியது’ என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், ‘இயைந்தக்கால்’ என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், ‘அந்நிலையே’ என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் ‘செய்தற்கு அரிய’ என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.).
உரை:
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.
மணக்குடவர் உரை:
பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.
Transliteration:
eydhaR kariyadhu iyaindhakkaal anhnhilaiyae
seydhaR kariya seyal
Translation:
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.
Explanation:
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
மறுமொழி இடவும்