பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
மு.வரதராசனார் உரை:
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
பரிமேலழகர் உரை:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு – ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.
‘(காலத்தோடு பொருந்துதல் – காலம் தப்பாமல் செய்தல். ‘தீராமை’ என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)’ .
உரை:
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
மணக்குடவர் உரை:
காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காலத்தோடு பொருந்த தொழில்செய்து நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதானது செல்வத்தினைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டுகின்ற கயிறாகும்.
Transliteration:
paruvaththoadu otta ozhukal thiruvinaith
theeraamai aarkkunG kayiRu
Translation:
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season’s aid.
Explanation:
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
மறுமொழி இடவும்