எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
மு.வரதராசனார் உரை:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் – அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும், வாழும் உயிர்க்குக் கண் என்ப – அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.
(எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன.அவை கருவியாதல் ‘ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் – மாதே, அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின் , திறமாமோ எண்ணிறந்தால் செப்பு’. ‘எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து , கட்டறுத்து வீடு பெறும்’. இவற்றான் அறிக. ‘என்ப’ என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.) .
உரை:
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
மணக்குடவர் உரை:
எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இரண்டினையும் அறிந்தோர், சிறப்புடைய மக்களுயிர்கட்குக் கண் என்று சொல்லுவார்கள்.
Transliteration:
eNNenpa Enai ezhuththenpa ivviraNdum
kaNNenpa vaazhum uyirkku
Translation:
The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live.
Explanation:
Letters and numbers are the two eyes of man.
மறுமொழி இடவும்