கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
மு.வரதராசனார் உரை:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது – இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து – நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. (‘கண்கள்’ என்பது அதிகாரத்தான் வந்தது. ‘இது’ என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் ‘நகத்தக்கது உடைத்து’ என்றாள்.)
உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
மணக்குடவர் உரை:
இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இக்கண்கள் அன்று காதலரைத்தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்ற தன்மை நம்மால் சிரிக்கத் தக்கதாக இருக்கின்றது.
Transliteration:
kadhumenath thaanoakkith thaamae kaluzhum
ithunakath thakka thudaiththu
Translation:
The eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile!.
Explanation:
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?.
மறுமொழி இடவும்