அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
மு.வரதராசனார் உரை:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.
பரிமேலழகர் உரை:
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, ‘அலரஞ்சி ஆற்றல் வேண்டும்’ என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை – தம்மை எதிர்ப்பட்ட ஞான்று ‘நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு’ என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ – நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. (‘நாண’ என்னும் வினையெச்சம் ‘ஒல்வது’ என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. ‘கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது’? என்பதாம்.).
உரை:
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
மணக்குடவர் உரை:
அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எம்மைக் கண்டபோது ‘உம்மைப் பிரியேன் அஞ்சாதே’ என்று கூறியவர், தானே இன்று கண்டார் பலரும் நாணும் வகையில் பிரிந்திருப்பாராயின், நாம் அயலார் கூறும் அலருக்கு நாணுதல் கூடுமோ?.
Transliteration:
alarnhaaNa olvadhoa anjaloambu endraar
palarnhaaNa neeththak kadai
Translation:
When he who said ‘Fear not!’ hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?.
Explanation:
When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal.
மறுமொழி இடவும்