எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
மு.வரதராசனார் உரை:
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு – உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் – அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் – வாயில் மறுத்தல். இளிவு – வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் – வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.).
உரை:
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.
மணக்குடவர் உரை:
அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு?. இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உயிரின்மீது காதலையுடைய எனது நெஞ்சு நம்மை ஏளனம் செய்து சென்றார் என்று நாமும் ஏளனம் செய்வோமாயின், பின் நமக்கே இழிவாகும் என்று எண்ணி அவர் திறத்தினையே நினைத்துக் கொண்டிருக்கின்றது.
Transliteration:
ellin ilivaam-endru enni avarthiram
ullum uyirkkaadhal nenju
Translation:
If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o’er.
Explanation:
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
மறுமொழி இடவும்