பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
மு.வரதராசனார் உரை:
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.
பரிமேலழகர் உரை:
(‘நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை’ என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் – இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் – இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. (‘என்பார்’ என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.).
உரை:
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.
சாலமன் பாப்பையா உரை:
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
மணக்குடவர் உரை:
இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இவள் பொறுத்திருக்க முடியாமல் பசப்பு நிறம் அடைந்துவிட்டார் என்று என்னைப் பழிகூறுவதல்லாமல், இந்த நாயகியை அவர்விட்டுப்போய் விட்டார் என்று அவரைக் குறைகூறுவார் ஒருவரும் இல்லை.
Transliteration:
pasandhaal ival-enpadhu allaal ivalaith
thurandhaar avar-enpaar il
Translation:
On me, because I pine, they cast a slur;
But no one says, ‘He first deserted her.’.
Explanation:
Besides those who say “she has turned sallow” there are none who say “he has forsaken her”.
மறுமொழி இடவும்