மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
மு.வரதராசனார் உரை:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து – இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை – உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை. (‘துயிற்றி’ எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. ‘துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று’ என்பது பற்றி, ‘அளித்து’ என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)
உரை:
இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.
சாலமன் பாப்பையா உரை:
பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!.
மணக்குடவர் உரை:
இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது. இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இந்த இரவுப்பொழுது எல்லா உயிர்களையும் துயிலச் செய்வதால் துயிலாதிருக்கின்ற என்னயல்லாமல் வேறு துணையில்லாமல் இருக்கின்றது.
Transliteration:
mannuyir ellaam thuyitri aliththiraa
ennalladhu illai thunai
Translation:
All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps!.
Explanation:
The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.
மறுமொழி இடவும்