ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
மு.வரதராசனார் உரை:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
பரிமேலழகர் உரை:
(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் – இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் – இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. (‘ஊரவர்’ என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.).
உரை:
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
மணக்குடவர் உரை:
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இந்தக் காமநோயாகிய பயிரானது இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாகவும் அதுகேட்ட அன்னை சொல்லும் கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்கின்றது.
Transliteration:
ooravar kavai eruvaaka annaisol
neeraaka neeLum-inh noai
Translation:
My anguish grows apace: the town’s report
Manures it; my mother’s word doth water it.
Explanation:
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
மறுமொழி இடவும்