வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
மு.வரதராசனார் உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
பரிமேலழகர் உரை:
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் – வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற – அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், ‘மற்றைய’ என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் ‘பிற’ என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
மணக்குடவர் உரை:
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
Transliteration:
vinaiththitpam enpadhu oruvan manaththitpam
matraiya ellaam piRa
Translation:
What men call ‘power in action’ know for ‘power of mind’
Externe to man all other aids you find.
Explanation:
Firmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature.
மறுமொழி இடவும்