தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
மு.வரதராசனார் உரை:
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
தெய்வத்தான் ஆகாது எனினும் – முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் – முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.).
உரை:
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
மணக்குடவர் உரை:
புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.
Transliteration:
theyvaththaan aakaa theninum muyaRchidhan
meyvaruththak kooli tharum
Translation:
Though fate-divine should make your labour vain;
Effort its labour’s sure reward will gain.
Explanation:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
மேற்கண்ட எந்த விளக்கமும் சரியானது அல்ல. ஏனெனில் முயற்சி என்பது முயற்சி and முயலுதல் என பொருள்படும். ஆங்கிலத்தில் practice. மீண்டும் முயலுதல். மீண்டும் மீண்டும் முயலும் முயற்சி செய்யும் ஒருவன்/ ஒருத்தி கடவுளை நம்ப தேவை இல்லை. இது தான் உண்மையான விளக்கம். முயற்சிக்கும் எவரும் தெய்வத்தை நம்ப தேவை இல்லை இதுதான் கரு பொருள்
உங்கள் கருத்தை பதிவு செய்ததிற்கு நன்றி.
‘அகதெனினும்’ என்று திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள வார்த்தையை தாங்கள் கவனிக்கவில்லையா?
//மெய் வருத்த// என்பது தவறு. மாறாக, **மெய் வருந்த** என்பதுதான் சரியானது.
வெறுமனே, நாம் நமது உடலை வருத்தினால், கூலி கிடைக்காது.
மெய் வருந்த முயற்சி செய்தால் மட்டும்தான் கிடைக்கும்.
உள்ளீட்டிற்கு நன்றி