படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
மு.வரதராசனார் உரை:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
பரிமேலழகர் உரை:
படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் – நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது – மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
(‘உம்மை’ எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் – பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு ‘நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்’ என்று உரைப்பாரும் உளர்.).
உரை:
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.
மணக்குடவர் உரை:
பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.
Transliteration:
patiyutaiyaar patramaindhak kaNNum matiyutaiyaar
maaNpayan eydhal aridhu
Translation:
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.
Explanation:
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
மறுமொழி இடவும்