இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
மு.வரதராசனார் உரை:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் – மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.
(கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு உரியனாக்குதல்.).
உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
மணக்குடவர் உரை:
இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக. இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.
Transliteration:
ithanai ithanaal ivanmutikkum endraaindhu
adhanai avan-kaN vidal
Translation:
‘This man, this work shall thus work out,’ let thoughtful king command;
Then leave the matter wholly in his servant’s hand.
Explanation:
After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty.
மறுமொழி இடவும்