காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
மு.வரதராசனார் உரை:
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
பரிமேலழகர் உரை:
கலங்காது ஞாலம் கருதுபவர் – தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் – தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.’
(தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி ‘காலம் கருதி’ என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.).
உரை:
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
மணக்குடவர் உரை:
செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும் அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.
Transliteration:
kaalam karudhi iruppar kalangaadhu
Gnaalam karudhu pavar
Translation:
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.
Explanation:
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
மறுமொழி இடவும்