கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
மு.வரதராசனார் உரை:
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதான் சொல் காமுறுதல் – கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று – இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
(‘இனைத்தென அறிந்த சினை’ (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.).
உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
மணக்குடவர் உரை:
கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்.
இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கல்வி இல்லாத ஒருவன் அவையில் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுதல் முலை இரண்டும் இல்லாத (முகிழ்த்தல் இல்லாத) பெண்ணான ஒருத்தி பெண்ணின்பத்தை விரும்பியது போலாகும்.
Transliteration:
kallaadhaan soRkaa muRudhal mulaiyiraNdum
illaadhaaL peNkaamuR Ratru
Translation:
Like those who doat on hoyden’s undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.
Explanation:
The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.
மறுமொழி இடவும்