குறள் 162:
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
மு.வரதராசனார் உரை:
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் – யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை – மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், ‘யார் மாட்டும்’ என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.).
உரை:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
மணக்குடவர் உரை:
விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவன் யாவரிடத்திலும் பொறாமை இல்லாமல் இருப்பதே சிறந்த செல்வமாகும். அவன் பெறுகின்ற சீரிய செல்வங்களுள், அச்செல்வத்திற்குச் சமமானது வேறு எதுவும் இல்லை.
Translation:
If man can learn to envy none on earth,
‘Tis richest gift, -beyond compare its worth.
Explanation:
Amongst all attainable excellence there is none equal to that of being free from envy towards others.
மறுமொழி இடவும்