நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
மு.வரதராசனார் உரை:
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் – என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; அனைததும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று – நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. (‘யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்’, என்னுங் கருத்தால் ‘அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி’? என்றாள். ‘வாளாவிருத்தலும் குற்றமாயிற்று’ என்பதாம்.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.
மணக்குடவர் உரை:
தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் சொற்களுக்கும் செயல்களுக்கும் அவள் கோபிப்பதால் நான் பேசாமல், அவளுடைய உறுப்புக்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய உறுப்புக்களை வேறு பெண்களின் உறுப்புக்களுடன் ஒப்புட்டு நோக்கீனிர் என்று கூறிக் கோபித்துக் கொண்டாள்.
Transliteration:
ninaiththirundhu noakkinum kaayum anaiththu-neer
yaarulli noakkineer endru
Translation:
I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’.
Explanation:
Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”.
மறுமொழி இடவும்