கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
மு.வரதராசனார் உரை:
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே – காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் – புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் – சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். ‘அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்’ என்பது பயன்.).
உரை:
விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.
மணக்குடவர் உரை:
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலி முன்னொரு முறை கண்ணினால் மட்டும் ஊடுதல் செய்து தழுவுதலில் என்னைவிட விருப்பங்கொண்டு அந்த ஊடலினையும் மறந்து அப்போதே கூடிவிட்டாள்.
Transliteration:
kannin thuniththae kalanginaal pulludhal
enninum thaanvidhup putru
Translation:
Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o’erpowered, her tenderness surpassed my own.
Explanation:
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
மறுமொழி இடவும்