எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
மு.வரதராசனார் உரை:
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
பரிமேலழகர் உரை:
எல்லைக்கண் நின்றார் – நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் – தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை – உரிமையொழியாமை. தொலைவு – பொருட்கேடும் போர்க்கேடும்.).
உரை:
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.
Transliteration:
ellaikkaN nhindraar thuRavaar tholaividaththum
thollaikkaN nindraar thodarpu
Translation:
Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.
Explanation:
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
மறுமொழி இடவும்