குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
மு.வரதராசனார் உரை:
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
பரிமேலழகர் உரை:
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் – பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், ‘மருள் தீர்ந்த’ மாசுஅறு காட்சியவர் – மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். “(‘தூய அறிவு’ மெய்யறிவு. ‘மருள் தீர்ந்த’ என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது).
உரை:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
மணக்குடவர் உரை:
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்திலிருந்து நீங்கிய தூய அறிவினையுடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.
Translation:
The men of vision pure, from wildering folly free,
Not e’en in thoughtless hour, speak words of vanity.
Explanation:
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
மறுமொழி இடவும்