துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
மு.வரதராசனார் உரை:
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?.
பரிமேலழகர் உரை:
(தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் – இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் – துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ? (துப்புப் பகையுமாதல், ‘துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்’ (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், ‘அவர் செய்வது அறியப் பெற்றிலேம்’ என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)
உரை:
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?.
சாலமன் பாப்பையா உரை:
இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?.
மணக்குடவர் உரை:
மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ? இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இன்பத்தினைச் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பத்தினைச் செய்பவர், துன்பம் செய்வதற்கான பகைமையின் கண்ணே என்ன செய்வாரோ?.
Transliteration:
thuppin evanaavar man-kol thuyarvaravu
natpinul aatru pavar
Translation:
Who work us woe in friendship’s trustful hour,
What will they prove when angry tempests lower?.
Explanation:
He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?.
மறுமொழி இடவும்