ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
மு.வரதராசனார் உரை:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
பரிமேலழகர் உரை:
ஆற்றின் வருந்தா வருத்தம் – முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் – துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
(முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.).
உரை:
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
மணக்குடவர் உரை:
மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
செய்து முடிக்க வேண்டிய வழியினால் தொழிலினை முயலாத முயற்சி, துணையாகப் பலர் இருந்து குற்றம் வராமல் காப்பாற்றினாலும் குற்றம் உடையதாகவே முடியும்.
Transliteration:
aatrin varundhaa varuththam palarnhindru
poatrinum poththup padum
Translation:
On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.
Explanation:
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.
மறுமொழி இடவும்