நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.
மு.வரதராசனார் உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.
பரிமேலழகர் உரை:
(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் – ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் – நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் ‘கொடியார்’ என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் ‘பீழிப்பது’ என்றும் கூறினாள். ‘நனவின் இல்லது கனவினும் இல்லை’ என்பர், ‘அது கண்டிலம்’, என்பதாம்.).
உரை:
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.
மணக்குடவர் உரை:
நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருபொழுதும் நனவிலே வந்து அன்பு செய்யாத கொடிய காதலர் நாள்தோறும் கனவில் வந்து நம்மை வருத்துவது எந்தப் பொருத்தம் பற்றியோ?.
Transliteration:
nanavinaal nalkaak kotiyaar kanavanaal
en-emmaip peezhip padhu
Translation:
The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?.
Explanation:
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.
மறுமொழி இடவும்