குறள் 1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

மு.வரதராசனார் உரை:

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

பரிமேலழகர் உரை:

(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் – ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் – அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. (‘ஊடுக’, ‘நீடுக’ என்பன வேண்டிக்கோடற்பொருளன. ‘மன்’ இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

சாலமன் பாப்பையா உரை:

ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

மணக்குடவர் உரை:

விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும்.

Transliteration:

ootuka mannoa oliyizhai yaamirappa
needuka mannoa iraa

Translation:

Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.

Explanation:

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.

Share

Recent Posts

குறள் 1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 1326

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More

7 வருடங்கள் ago

குறள் 1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. மு.வரதராசனார் உரை: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய… Read More

7 வருடங்கள் ago