பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
மு.வரதராசனார் உரை:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் – அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் – இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. (பெருமை இழத்தல் – மெலிதல். பைந்தொடி – பசிய பொன்னால்செய்த தொடி, ‘சோரும்’ என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. ‘அன்றும் பிரிந்தார்’ என்று அவரன்பின்மை உணர்த்தி, ‘இன்றும் குறித்த பருவத்து வந்திலர்’ என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; ‘இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ’? என்பதாம்.).
உரை:
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
மணக்குடவர் உரை:
துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
துணைவர் நீங்கியதால் அவரால் பெற்ற செயற்கையேயன்றி இயற்கையழகும் இழந்த தோள்கள், இன்று அதற்கு மேலேதம் பெருமை இழந்து வளையல்கள் சுழல நிற்கின்றன.
Transliteration:
panai-neengip paindhoti soarum thunaineengith
tholkavin vaadiya thoal
Translation:
When lover went, then faded all their wonted charms,
And armlets’ golden round slips off from these poor wasted arms.
Explanation:
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More