அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
மு.வரதராசனார் உரை:
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
பரிமேலழகர் உரை:
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் – அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் – ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் ‘துன்பம்’ என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. ‘தவாஅது மேன்மேல் வரும்’ என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.).
உரை:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
மணக்குடவர் உரை:
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அவா இல்லாதவர்களுக்கு வருவதொரு துன்பம் இல்லை. அந்த ஒன்றும் இருந்துவிட்டால் இல்லாத துன்பங்களும் இடைவிடாமல் வரும்.
Transliteration:
avaa-illaark killaakunh thunpam aqdhuNdael
thavaaadhu maenmael varum
Translation:
Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow’s tide.
Explanation:
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.
மறுமொழி இடவும்