ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
மு.வரதராசனார் உரை:
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை – நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று – பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். (‘நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்’, என்பதாம்.).
உரை:
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
மணக்குடவர் உரை:
நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும்.
Transliteration
ooti yavarai unaraamai vaatiya
valli mudhalarin thatru
Translation:
To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops.
Explanation:
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
மறுமொழி இடவும்