பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
மு.வரதராசனார் உரை:
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
பரிமேலழகர் உரை:
நோதக்க நட்டார் செயின் – தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க – அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. (‘ஒன்றோ’ என்பது எண்ணிடைச்சொல். ‘செயின்’ எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.).
உரை:
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.
மணக்குடவர் உரை:
தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.
Transliteration:
paedhaimai ondroa perungizhamai endruNarka
noadhakka nattaar seyin
Translation:
Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.
Explanation:
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
மறுமொழி இடவும்