தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
மு.வரதராசனார் உரை:
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
பரிமேலழகர் உரை:
(‘இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன’? என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு – மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் – இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள். (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், ‘மாலை உழக்கும் துயர்’ என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, ‘தொடலைக் குறுந்தொடி’ என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ‘இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்’ என்பது கருத்து.).
உரை:
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
மணக்குடவர் உரை:
மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மாலைப் பொழுதில் அனுபவிக்கும் துயரத்தினையும் அதற்க்கு மருந்தான மடலினையும் முன்பு அறியேன். இப்போது மாலைபோலத் தொடர்ந்து சிறு வளையல்களையுடைய இப்பெண் அவைகளைத் தந்தாள்.
Transliteration:
thodalaik kuRundhoti thandhaaL matalodu
maalai uzhakkum thuyar
Translation:
The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me ‘horse of palm,’ and pangs of eventide!.
Explanation:
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
மறுமொழி இடவும்