குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
மு.வரதராசனார் உரை:
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து – ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், ‘குற்றமும்’ என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் ‘குன்றா இனனும்’ என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் ‘அறிந்து யாக்க’ என்றும் கூறினார்.).
உரை:
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
மணக்குடவர் உரை:
ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.
Transliteration:
kuNamum kutimaiyum kutramum kundraa
inanum aRindhiyaakka natpu
Translation:
Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.
Explanation:
Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one’s relations.
மறுமொழி இடவும்