செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
பரிமேலழகர் உரை:
செய்தக்க அல்ல செயக் கெடும் – அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் – இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்.
(செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் ‘செய்வன செய்து, ஒழிவன ஒழிக’ என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.).
உரை:
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.
மணக்குடவர் உரை:
செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.
இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தான் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் ஒருவன் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதிருப்பதாலும் கெட்டுவிடுவான்.
Transliteration:
seydhakka alla seyakkedum seydhakka
seyyaamai yaanunG kedum
Translation:
‘Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.
Explanation:
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
மறுமொழி இடவும்