கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
மு.வரதராசனார் உரை:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
பரிமேலழகர் உரை:
கல்லா ஒருவன் தகைமை – நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் – அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
(‘கற்றவன்’ என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.).
உரை:
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
மணக்குடவர் உரை:
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும்.
இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனொன்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.
Transliteration:
kallaa oruvan thakaimai thalaippeydhu
sollaatach soarvu padum
Translation:
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.
Explanation:
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).
மறுமொழி இடவும்