மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
மு.வரதராசனார் உரை:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
பரிமேலழகர் உரை:
மக்களே போல்வர் கயவர் – வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் – அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. (முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். ‘அவர்’ என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.).
உரை:
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.
மணக்குடவர் உரை:
மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை. உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார்.
Transliteration:
makkaLae poalvar kayavar avaranna
oppaari yaangaNda thil
Translation:
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I’ve never seen.
Explanation:
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).
மறுமொழி இடவும்