உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
மு.வரதராசனார் உரை:
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
பரிமேலழகர் உரை:
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் – அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து – அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.
(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் ‘உள்ளத்து அனையது உயர்வு’ என்றதனையே வற்புறுத்தியவாறு.).
உரை:
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
மணக்குடவர் உரை:
நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்.
இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
Transliteration:
uLLuva thellaam uyarvuLLal matradhu
thaLLinunh thaLLaamai neerththu
Translation:
Whate’er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
Explanation:
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
மறுமொழி இடவும்