அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
மு.வரதராசனார் உரை:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
பரிமேலழகர் உரை:
அறன் இழுக்காது – தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி – அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு – வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.
(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ (புறநா. 55) – என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, ‘மறன் இழுக்கா மானம்’ என்றார். அஃதாவது,
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான’.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.).
உரை:
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.
மணக்குடவர் உரை:
அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறத்திலிருந்து வழுவாமல் ஒழுகி, அறமல்லாதவற்றை நிகழ வொட்டாமல் கடிந்து வீரத்தில் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசனாவான்.
Transliteration:
aRanizhukkaa thallavai neekki maRanizhukkaa
maanam udaiya tharasu
Translation:
Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour’s grace maintains.
Explanation:
He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.
மறுமொழி இடவும்