ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
மு.வரதராசனார் உரை:
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
பரிமேலழகர் உரை:
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை – அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் – கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் – ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.).
உரை:
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?.
மணக்குடவர் உரை:
இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.
Transliteration:
eevaarkaN eNNundaam thoatram irandhukoaL
maevaar ilaaak kadai
Translation:
What glory will there be to men of generous soul,
When none are found to love the askers’ role?.
Explanation:
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).
மறுமொழி இடவும்