தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
மு.வரதராசனார் உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
பரிமேலழகர் உரை:
முற்றும் இடம் கண்ட பின்அல்லது – பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க – அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க – அவரைச் சிறியர் என்று இகழாதொழிக.
(முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து. ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.).
உரை:
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.
மணக்குடவர் உரை:
முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பகைவரை முற்றுகை இடுவதற்கு ஏற்ற இடம் பெற்றபின் அல்லாமல் அவர் மீது யாதொரு தொழிலினையும் தொடங்காதிருத்தல் வேண்டும். அப்பகைவரைச் சிறியர் என்று இகழாதிருத்தல் வேண்டும்.
Transliteration:
thotangaRka evvinaiyum eLLaRka mutrum
itangaNda pin-al ladhu
Translation:
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.
Explanation:
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.
மறுமொழி இடவும்