குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
மு.வரதராசனார் உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
பரிமேலழகர் உரை:
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் – அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை – ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.).
உரை:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.
மணக்குடவர் உரை:
அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறியாமையில் உள்ளவர்கள் அறத்திற்குத்தான் அன்பு துணையென்று கூறுவர். மறத்தினை (தீ நெறியினை) நீக்குதற்கும் அந்த அன்பே துணையாகும்.
Transliteration:
Araththirke Anbusaar Penba Ariyaar
Maraththirkum Aqdhe Thunai.
Translation:
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.
Explanation:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
மறுமொழி இடவும்